Jiivi 2 & Jiivi Movie review | ஜீவி 2 மற்றும் ஜீவி திரைப்பட விமர்சனம்
ஜீவி மற்றும் ஜீவி 2
ஜீவி என்ற 2019 ல் வெளிவந்த திரைப்படத்தின்
தொடர்ச்சி தான் ஜீவி 2. தற்போது
ஜீவி அமேசான் பிரைம் தளத்தில்
உள்ளது. கர்மா, தொடர்பியல், முக்கோணவிதி, மையப்புள்ளி என பல்வேறு கோணத்தில் கதை அமைந்துள்ளது.
ஜீவி ஒன்றை பார்த்த பின் இரண்டாம்
பாகத்தை பார்ப்பது தெளிவான புரிதலுக்கு வழிவகுக்கும். முன்பு பார்த்தவர்களுக்கு முன்னோட்டமே போதுமானது.
இந்த திரைப்படத்தின் முதல் பகுதியில் சரவணன்(வெற்றி) எந்த வேலைக்கும்
செல்லாமல் கிராமத்தில் வெட்டியாக சுற்றிக்கொண்டு ஊர் வம்பில் ஈடுபடும்
நபராக இருப்பார். அதே சமயம் எந்த
விஷயத்தையும் கூர்ந்து கவனித்து அதை ஆராய்ந்து செயல்படுவது
அவரது வழக்கம். பெரிய அளவில் படிக்கவில்லை
என்றாலும் நூலகத்திற்கு சென்று தனது அறிவை வளர்த்துக்கொண்டு மாணவர்களுக்கு
அறிவியல் சார்ந்த கருவிகளை செய்து கொடுப்பார்.
இப்படி
இருக்கும் நிலையில் வேலை நிமித்தமாக சென்னை
வந்து பல வேலைகளில் மாறி கடைசியாக ஒரு பழரச கடையில்
வேலைக்கு அமர்வார். அந்த கடையோடு ஒட்டிய
தேநீர் கடையில் மணி (கருணாகரன்)
பணியாற்றி வருவார். இருவரும் நண்பர்களாக இருப்பதோடு ஒரே அறையில் வாடகைக்கு
தங்கி இருப்பார்கள்
அந்த வீட்டின் உரிமையாளர் லட்சுமி (ரோகினி) அவருக்கு பக்கவாதத்தால்
பாதிக்கப்பட்ட கணவர்,கண்கள் தெரியாத
திருமண வயதில் இருக்கும் ஒரு
மகள் இருப்பார்கள். லட்சுமிக்கு ஒரு தம்பி(மைம் கோபி) சிங்கப்பூரில்
இருப்பார். இப்படி இருக்க சரவணனுக்கு
தன் கடைக்கு எதிரே உள்ள கடையில் பணிபுரியும் பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டு சிறிது காலத்திலேயே,
இவரின் பொருளாதார சூழல் காரணமாக அதில் பிரிவும் ஏற்படும். இவரின் வறுமை பணத்தின் தேவை கருதி ஒரு கட்டத்தில்
தன் வீட்டு உரிமையாளர் பார்வையற்ற தனது மகளுக்காக சேர்த்த நகையை திருடிவிடுவார்
அதற்கு
பிறகு இவர் காவல் துறையிடம்
பிடிபட்டரா, அல்லது இவரின் குற்ற
உணர்வால் திருந்தினாரா, சிங்கப்பூரில் இருந்து வரும் மைம்
கோபியிடம் சிக்கினாரா என்ற கோணத்தில் கதை
நகரும் என்று எதிர் பார்க்கும்
போது. தொடர்பியல், முக்கோண விதி மற்றும்
மையப்புள்ளி என்று கதையை வேறு
கோணத்தில் நகர்த்தி அதில் வெற்றியும் கிடைத்தது
இயக்குனருக்கு. இதில் இவருக்கும் வீட்டு உரிமையாளர் குடுபத்திற்குமான
தொடர்பியல் மிகவும் நேர்த்தியாக அமைத்திருப்பார்கள். இதில் உள்ள முக்கோணவிதி எப்படி
இன்னொரு குடும்பத்துடன் பொருந்துகிறது என்பதை கடைசியில் தெளிவாக காட்டி இருப்பார் இயக்குனர்.
இதன் மையப்புள்ளியையும் நாம் முதல் பகுதியிலேயே
புரிந்துகொள்ளும் படி முடித்து இருப்பார்கள்.
கதையும் தோய்வின்றி சற்று விறுவிறுப்பாகவே நகரும்.
அணைத்து கதாபாத்திரங்களும் தங்களது வேலையை சிறப்பாக
செய்து இருப்பார்கள். குறிப்பாக கருணாகரன், மைம் கோபி ,ரோகினி
போன்றவர்கள் இயல்பாக தங்கள் நடிப்பை
வெளிப்படுத்தி இருப்பார்கள். இதன் அடிப்படையில் ஜீவி முதல் பகுதி சிறப்பாக
இருந்தது.
இப்படி
இருக்க இரண்டாம் பாகம் வரும் போது
அதற்கான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. உடனடியாக
பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி பார்க்கும் போது இரண்டாம் பாகத்தில் மீண்டும்
இதே போன்ற பிரச்சனையில் சரவணன் சிக்குகிறார். அது முதல் பகுதியில் இருந்தது போல் சுவாரசியமாகவும்
நம்பகத்தன்மையோடும் இல்லை. அதோடு முன் பகுதியில் மிரட்டிய எந்த ஒன்றும் இந்த பகுதியில்
சிறப்பாக செயல்படவில்லை.
முதல் பகுதியில்
தெளிவான செயல்பாட்டை வெளிப்படுத்திய சரவணன் கதாபாத்திரம் இந்த பகுதியில் அதை வெளிப்படுத்தாமல்
சற்று முட்டாள்தனமாக செயல்பட்டதோடு விதியே அவரை வழி நடத்தியது போல் இருந்தது. இந்த
கதையில் ஒரு திருப்பு முனைக்கான சம்பவம் இருக்கும். ஆனால் அதை வேறு விதமாக இயக்குனர்
கையாண்டு மைய புள்ளியோடு இணைக்க அதை பயன்படுத்தி இருப்பார். ஜீவி ஒன்று நிச்சயம் பார்க்க
வேண்டிய படம். இருப்பினும் ஜீவி முதல் பாகத்திற்காக இரண்டாம் பாகத்தை பார்க்கலாம்
